குடியாத்தம்: குடியாத்தம் அருகே பட்டா தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் கிராம உதவியாளர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் நடுகெட்டை கிராமத்தைச் சேர்ந்த போர்வெல் உரிமையாளர் மேகநாதன்(28). இவரது அனுபவத்தில் உள்ள பூர்வீக காலி இடத்துக்கு பட்டா கோரி 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக அக்ராவரம் விஏஓ ஜெயமுருகன் (39) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது, ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்க முடியும் என ஜெயமுருகன் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து மேகநாதன், லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அவரிடம், ரூ.10 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளில், ரசாயனம் தடவி கொடுத்து அனுப்பினர். இதையடுத்து, நேற்று கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற மேகநாதனிடம், பணத்தைகிராம உதவியாளர் தேன்மொழியிடம்(52) கொடுக்குமாறு ஜெயமுருகன் கூறியுள்ளார். அந்த பணத்தை தேன்மொழி பெற்றுக்கொண்டபோது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஜெயமுருகன், தேன்மொழியை கைது செய்தனர்.