கும்பகோணம்: போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் விருமாண்டி சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பால குரு (48), இவரும் கும்பகோணம் கருணைக் கொல்லை தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சவுந்தர ராஜன் (43). பாலகுருவுக்கும், சவுந்தர் ராஜனுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.

கூலித் தொழிலாளியான இவர்கள் 2 பேரும் தினந்தோறும் கும்பகோணம் சக்கரப்படித்துறையிலுள்ள காவேரி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் இவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் நேற்று இரவு மது அருந்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அந்த இடத்தில் பாலகுருவும் சவுந்தர ராஜனும் உயிரிழந்த கிடப்பதையறிந்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் அந்த இடத்துக்கு வந்த போலீஸார் 2 உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸார் விசாரணையில், போதைக்காக இருவரும் மதுவில் சானிடைசரை கலந்து அருந்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் அவர்கள் இருவருடன் மது அருந்திய மற்ற 2 பேர் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE