திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை வெகுஜோராக நடைபெறுவதாகவும், இதனால் மாணவர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகவும், ‘இந்து தமிழ்’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ராதாபுரம் வட்டாரத்தில் வேலை செய்து வரும் பிகார், உ.பி, மத்தியபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது கஞ்சா மூட்டைகளுடன் வந்து இறங்குகின்றனர். பின்னர் இவர் கள் கஞ்சா பயன்படுத்து வதுடன் வெளியில் உள்ள நபர்களுக்கும் விற்பனை செய்கின்றனர்.
வள்ளியூர் கோட்டையடியில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். பணகுடி பகுதியிலும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள் பலரும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராதாபுரம் வட்டாரத்தில் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் ரகசியமாக கண்காணித்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.