சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய ஊழியர், இலங்கை பயணி கைது செய்யப்பட்டனர்.
இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை வந்தது. பயணிகள் அனைவரும் சோதனை செய்து அனுப்பப்பட்டனர். அப்போது, சென்னை விமான நிலைய ஊழியர் சஞ்சய் என்பவர் கழிப்பறைக்குச் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்.
இதைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி, சந்தேகத்தின் பேரின் அந்த ஊழியரைப் பிடித்து விசாரித்தார். அப்போது, அவர் உள்ளாடைக்குள் ரூ.2.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஊழியரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த முகமது நிஸ்தார் என்பவர் சோதனைக்கு முன்பாக கழிப்பறைக்குச் சென்று தங்கத்தை மறைத்து வைத்ததும், அவரது கூட்டாளியான ஊழியர் கழிப்பறைக்குச் சென்று தங்கத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல காத்திருந்த முகமது நிஸ்தாரை அதிகாரிகள் கைது செய்தனர்.