உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கொலை: பங்களாவுக்குள் பதுங்கியிருந்த கணவர் கைது @ நொய்டா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்த தனது மனைவியை கொலை செய்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அஜய் நாத் வீட்டை உள்புறம் பூட்டிக் கொண்டு ஸ்டோர் ரூமில் மறைந்திருந்த நிலையில், அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ரேணு சின்ஹா. 61 வயதான இவர் தனது கணவர் அஜய் நாத்துடன் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் பங்களா வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரேணுவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் அவரது சகோதரர். ஆனால், ரேணு தொலைபேசி அழைப்பை ஏற்கவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸார் ரேணுவின் பங்களாவுக்கு வந்தனர். வீடு உள்புறம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. வெகுநேரம் போலீஸார் தட்டியும், மணி அடித்தும் அழைத்தும்கூட எவ்வித பதிலும் அவர்களுக்குக் கிட்டவில்லை. போலீஸார் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டின் ஒரு குளியலறையில் ரேணு சடலமாகக் கிடந்தார். சடலத்தை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், ரேணுவுடன் அவ்வீட்டில் அவரது கணவர் அஜய் நாத் மட்டுமே வாழ்ந்து வந்ததால், அவரை போலீஸார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவே இல்லை. இந்நிலையில், போலீஸார் வீடு முழுவதும் தீவிர தேடுதல் நடத்தினர். அப்போது வீட்டின் மாடியில் இருந்த ஒரு ஸ்டோர் ரூமில் அஜய் நாத் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பூட்டை உடைத்து அவரை அவர்கள் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE