மேட்டூர் அருகே மூதாட்டி படுகொலை: மேற்கு மண்டல ஐஜி, சேலம் எஸ்.பி நேரில் விசாரணை

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அடுத்த கொளத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐஜி பவானி ஈஸ்வரி, சேலம் எஸ்.பி அருண் கபிலன் நேரில் விசாரணை நடத்தினர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஏழுபரணை காட்டைச் சேர்ந்தவர் ராமசாமி (70), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு மல்லிகா (45) என்ற மகளும் பிரகாஷ் (40) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கொளத்தூரில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தம்பதியினர் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ராமசாமி எழுந்து அருகில் உள்ள கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராமசாமி எழுந்து வந்து அத்தாயம்மாளை பார்க்கும் போது, கட்டிலில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, ராமசாமி மகள் மல்லிகாவிற்கு தகவல் கொடுத்தார். பின்னர், கொலை சம்பவம் குறித்து கொளத்தூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகை, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) சங்கீதா மற்றும் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தடயவியல் அறிவியல் நிபுணர்கள் வீடு முழுவதும் ஆய்வு செய்து, கை ரேகைகளை கைப்பற்றினர்.

கொளத்தூர் அடுத்த ஏழுபரணைகாடு பகுதியில் கோவை மேற்கு மண்டல ஐஜி பவானி ஈஸ்வரி, சேலம் எஸ்பி அருண் கபிலன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர்

பின்னர், மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் இருந்து மேற்கு பக்கம் நோக்கி சுமார் 400 மீட்டர் சென்ற நிலையில் திரும்பி வீட்டுக்கு வந்தது. தொடர்ந்து, மேற்கு மண்டல ஐஜி பவானி ஈஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், மேற்கு மண்டல ஐஜியின் அதி விரைவுப் படை போலீஸார் வனப்பகுதிகளில் கொலைக்கான ஆயுதங்கள் உள்ளதா? என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், மேட்டூர், கருமலைக் கூடல், மேச்சேரி உள்ளிட்ட சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒட்டி உள்ளதால், ஈரோடு போலீஸாரும் மாவட்ட எல்லை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொலையான அத்தாயம்மாள் மகன் பிரகாஷுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கவிதா பிரகாஷைப் பிரிந்து திருச்செங்கோட்டில் வசித்து வருகிறார். பிரகாஷ் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, 2வது மனைவி தங்கமணியும் பிரகாஷும் சொத்துக்களை விற்று பணம் தர வேண்டும் என பெற்றோர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

கொளத்தூர் அடுத்த ஏழுபரணை காட்டில் கொலை நடந்த வீட்டில் மோப்ப நாய் லில்லி கொண்டு தேடுதலில் போலீஸார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்று பணம் கொடுத்துள்ளனர். இதனால் போலீஸாருக்கு பிரகாஷ் தங்கமணி ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து 2 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE