கும்மிடிப்பூண்டி | மின்சார ரயிலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

By செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் (18). சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், நேற்று காலை, மின்சார ரயிலில், எளாவூரில் இருந்து, சென்னை சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்றபோது, திலீப் இருந்த பெட்டியினுள் நுழைந்த 3 பேர் அரிவாளால் திலீப்பின் தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த திலீப், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, திலீப்புக்கு தலையில் 10 தையல்கள் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொருக்குபேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், திலீப்பை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி, திலீப்பை வெட்டிய மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE