புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
புதுச்சேரி துப்புராய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரோமார்க் சைமன் ஜீன் (26). தனியார் நிறுவனக் காவலாளி. இவர் புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையடுத்து, அச்சிறுமி கர்ப்பமானார். இப்பிரச்சினை குறித்து சிறுமியின் தரப்பில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போக்சோ வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு ரோமார்க் சைமன் ஜீன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ரோமார்க் சைமன் ஜீனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சோபனா தேவி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி புதுவை அரசுக்கு பரிந்துரைத்தார். நீதிமன்றத் தண்டனையை அடுத்து ரோமார்க் சைமன் ஜீன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.