மதுரை வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் இரண்டு மனித உடல் பாகங்கள் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

By என்.சன்னாசி

மதுரை: வரிச்சியூர் அருகே ஒரே கிணற்றுக்குள் கல் கட்டிய நிலையில் ஆண், பெண் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது குறித்து கருப்பாயூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகிலுள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பூவலிங்கம் (24). கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர் திடீரென மாயமானார். இதுதொடர்பாக பெற்றோர் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர்.

இந்நிலையில், வரிச்சியூர்- நாட்டார்மங்கம் செல்லும் குறுக்கு ரோட்டிலுள்ள தோட்டத்து கிணற்றுக்குள் மனித உடல் கிடப்பதாக தனிப்பிரிவு போலீஸுக்கு கிடைத்த சில ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதை உறுதிப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை சம்பந்தப்பட்ட கிணற்றில் போலீஸார் ஆய்வு செய்தனர். வயிற்று பகுதியில் கல் கட்டிய நிலையில், எழும்பு கூடுகளுடன் கூடிய உடல் கிடப்பது தெரியவந்தது.

மனித எழும்பு கூடு தான் என ஓரளவுக்கு காவல்துறையினர் உறுதி செய்தனர். பின்னர் எலும்பு கூடுகளை மீட்டனர். கொலையுண்ட நபரின் உடலை கல்லால் கயிற்றில் கற்றி வெளியே மிதக்கவிடாமல் கிணற்றுக்குள் வீசியிருக்கலாம் என தெரிகிறது. கொலை செய்யப்பட்டவர் மாயமான பூவலிங்கமாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. இருப்பினும், டிஎன்ஏ ஆய்வுக்கு பிறகே உறுதியாக சொல்ல முடியும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், 3 மாதத்துக்கு முன்பு மாயமான பூவலிங்கமாக இருக்கமோ என்ற சந்தேகிக்கத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத், டிஎஸ்பி சந்திரசேகரன், ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கூடியவர்களிடம் முழு விசாரணை, ஆய்வுக்கு பிறகே உயிரிழந்த நபர் யார் எனத் தெரியும். காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் பகுதி, எலும்பு கூடுகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உத்தரவின்பேரில், குன்னத்தூர், வரிச்சியூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிறிது நேரத்தில் அதே கிணற்றுக்குள் பெண் உடல் ஒன்றும் மீட்கப்பட்டது. ஒரே கிணற்றில் அடுத்தடுத்து இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE