சென்னை: சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் நாகராஜ் (34). புளியந்தோப்பு காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராக பணிபுரிகிறார். இவர்,அந்தப் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப்பணிக்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் காவலராக பணிபுரியும் நாசர் என்பவரும் சென்றார்.
இருவரும் வ.உ.சி.நகர் நகரில் தகராறு செய்து கொண்டிருந்த கும்பலை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அங்கிருந்த 3 பேர் காவலர்களைத் தாக்கினர்.தாக்குதலில் பலத்த காயமடைந்தநாகராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றார். காவலர் நாசருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து,போலீஸாரை தாக்கியதாக புளியந்தோப்பு சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த அருண் (27), அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி ரஞ்சன் (23), வினோத்குமார் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.