அயோத்தி ரயில் பெட்டியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண் காவலருக்கு தீவிர சிகிச்சை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் ஒரு பெட்டியில், ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடந்துள்ளார். பயணிகள் உதவியுடன் மீட்கப்பட்ட இவர், ராமர் கோயில் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.

உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இப்பெண், அயோத்தியின் அருகிலுள்ள சுல்தான்பூர் மாவட்டக் காவல் பணியில் காவலராகப் பணியாற்றுகிறார். இவர், புனித நகரமான அயோத்தியில் சாவன் ஜுலா எனும் விழாவின் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தார்.

சம்பவம் நடந்த அன்று இப்பெண் காவலர் மானிக்பூரிலிருந்து வந்த ரயிலின் காலிப்பெட்டியில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு படுகாயத்துடன், எழுந்து நடக்க முடியாமல் இருந்துள்ளார். ரயில் பெட்டியின் இருக்கைக்கு கீழே வெளியே தெரியாதபடி இருந்தவரை, அதில் ஏறிய பயணிகள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த ரயில்வேயின் ஜிஆர்பி போலீஸார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்குள் மயக்கம் அடைந்த அப்பெண்னின் நிலைமை மோசமாகி இருந்துள்ளது. இதனால், தலைநகரான லக்னோவின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பெண் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அயோத்தி மாவட்ட ஜிஆர்பியின் எஸ்பியான பூஜா யாதவ் கூறும்போது, ''மானக்பூர் சென்று அயோத்தி பணிக்கு திரும்பிய போது இப்பெண் காவலருக்கு அந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் மயக்கம் தெளிந்து பேசும் நிலையைப் பெற்ற பின்தான் என்ன நடந்தது என விசாரிக்க முடியும். அயோத்தியின் பாதுகாப்புக்காக அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து இவர்போல் போலீஸார் பலர் வரவழைக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE