திருப்பூர்: அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த சின்னத்திரை இசையமைப்பாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இயக்குநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
சென்னை சாலி கிராமம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் தசி (எ) சிவக்குமார் (50). சின்னத்திரை இசையமைப்பாளர். இவர் மற்றும் கோயம்பேடு நெற்குன்றத்தை சேர்ந்த சின்னத்திரை இயக்குநர் மூவேந்திரன் (54), தமிழ் அடியான் (50), ஆவடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் (44) ஆகியோர் கேரளாவில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே நேற்று மதியம் வந்த போது முன்பக்க டயர் வெடித்ததில், நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தசி (எ) சிவக்குமார், தமிழ் அடியான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த நாகராஜ், மூவேந்திரன் ஆகியோர் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து, அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.