போலி தமிழ்வழி கல்விச் சான்றிதழ் குறித்து அனைத்து பல்கலை.களிலும் விசாரணை நடத்தலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை: போலி தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக,அனைத்து பல்கலைக் கழகங்களிலும் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1 முதல் பிளஸ்-2 வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்றதாக பலருக்கு போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து, 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “போலி தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் தற்போதைய நிலை குறித்தஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் போலி தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் வழங்கியதாக இதுவரை 5 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “போலி தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் விசாரணை நடத்தலாம்” என்று தெரிவித்து, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE