திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் பெண் வரவேற்பாளரை கொன்ற இளைஞர் தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் பெண் வரவேற்பாளரை கொலை செய்த இளைஞர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் சத்யஸ்ரீ(21). திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த நரேந்திரன்(25) என்பவருக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், நரேந்திரனிடம் பேசுவதை சத்யஸ்ரீ தவிர்த்து வந்தார்.

வாக்குவாதத்தால் ஆத்திரம்..: இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த சத்யஸ்ரீயை, நரேந்திரன் பார்க்கச் சென்றார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே சத்யஸ்ரீ மயங்கிச் சரிந்தார். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சத்யஸ்ரீ உயிரிழந்தார். நரேந்திரன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE