சென்னை: பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்னை வந்த நகை வியாபாரியிடம் இருந்து 5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வியாபாரம் சம்பந்தமாக பெங்களூரு சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பினார்.
தனது பையில் ரூ.12.90 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை கொண்டு வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெள்ளி பொருட்கள், பணத்தை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரோ கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
» பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விவரங்கள் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
» மழைகால நோய்களை எதிர்கொள்ள மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்