சென்னையில் துப்பாக்கி குண்டு வெடித்து காவலாளி காயம்: காவல் துறை விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில், தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது துப்பாக்கி குண்டு வெடித்து காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அந்த காவலாளி தற்போது நலமுடன் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பு வெளியிட்ட தகவல்: சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள ATM-ல் பணம் நிரப்பும் பணி செய்து வரும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வருபவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராணாசிங் (30). வெள்ளிக்கிழமை காலை மேற்படி சேத்துப்பட்டு முகவரியில் உள்ள நிறுவனத்தில், உரிமம் பெற்ற துப்பாக்கியை (Double Barrel Gun) சுத்தம் செய்யும் போது, தற்செயலாக துப்பாக்கி குண்டு வெடித்து, ராணாசிங்கின் இடுப்பின் வலது பக்கம் பாய்ந்தது.

உடனடியாக ராணாசிங்கை மீட்ட அருகில் இருந்தவர்கள், KMC அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். ராணசிங் தற்போது நலமாக உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சேத்துப்பட்டு (G-7) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை செய்து வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கி குண்டு வெடித்து காயமடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE