’நியோ- மேக்ஸ்’ நிறுவன மோசடி: மதுரையில் எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது

By என். சன்னாசி

மதுரை: ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடியில் மேலும், எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

‘ நியோ-மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 12-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டன. இந்த நிறுவனங்கள் கூடுதல் வட்டி மற்றும் குறிப்பிட்ட ஆண்டில் முதலீடு தொகை இரடிப்பு செய்து வழங்கப்படும் என, ஆசைவார்தை கூறினர். இதை நம்பிய வாடிக்கையாளர்களிடம் பல கோடி பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார்கள் எழுந்தன.

கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், ‘ நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக் கண்ணன் (55), பாலசுப்பிரமணியன் (54),திருச்சி வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. ‘ நியோ -மேக்ஸ் ’ நிறுவனத்திற்கு சொந்தமான மதுரை உட்பட பல்வேறு மாவட்டத் திலுள்ள நிறுவனங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதன்மூலம் சொத்துக்கள் தொடர்பாக சில ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.மதுரையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார்களும் குவிந்துள்ளன.

இவ்வழக்கில் நெல்லை நிறுவனம் இயக்குநர்கள் சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக் குடி இசக்கிமுத்து, சகாயராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து, மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த பத்மநாதன்(55) என்பவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இவர், ஏற்கனவே எல்ஐசியில் பணிபுரிந்து, தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இணைந்து முகவர்கள் வாடிக்கை யாளர்களை எப்படி கவருவது குறித்து பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், மோசடியில் தொடர்பு இருக்கும் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இவ்வழக்கின் தலைமறைவாக உள்ள முக்கிய புள்ளிகள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோரை தொடர்ந்து தேடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE