சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 11.15 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், `இன்னும் சற்று நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலைய 1-வது நடைமேடையில் வெடிகுண்டு வெடிக்கும்' எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார், இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு காவல் நிலைய போலீஸாருக்கும், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல்டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்அந்த வளாகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு ஏதும் சிக்காததால், மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் கோயம்பேடு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு சோதனையால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.