ஈரோடு: தேனியைச் சேர்ந்த விவசாயியிடம் இருந்து, 2,000 ரூபாய் நோட்டுகளைத் தருவதாகக் கூறி, ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (50) என்பவர், ஈரோட்டில் தனக்கு தெரிந்த ஒருவரிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. மத்திய அரசின் அறிவிப்பால், அவற்றை மாற்ற முடியாமல் உள்ளார்.
எனவே, அவரிடம் ரூ.35 லட்சம் கொடுத்தால், அதற்கு பதிலாக, 2,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.50 லட்சம் தருவார் எனத் தெரிவித்து உள்ளார். இதை நம்பிய சிவாஜி, ரூ.35 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு வந்துள்ளார். லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தபோது, ராஜ்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ரூ.50 லட்சம் தருவதாகக் கூறி, தனது காரில் சிவாஜியையும், அவரது உறவினர் செந்தில் என்பவரையும் ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்திசையில் இருந்து காரில் வந்த 4 பேர், தங்களை அரசு அதிகாரிகள் எனக் கூறி, சிவாஜி மற்றும் அவரது உறவினரைகாரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு, சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சிவாஜி கொண்டு வந்திருந்த ரூ.35 லட்சம் மற்றும் அந்த கும்பலுடன் ராஜ்குமார் தப்பினார்.
» மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
» விழுப்புரம் | திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி விஏடி கலிவரதன் கைது
இதுகுறித்து கடந்த 5-ம் தேதி சிவாஜி மொடக்குறிச்சி போலீஸில் புகார் கொடுத்தார். இதில், கரூர் மாவட்டம் மலைக்கோவிலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை 21-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
அரசு அதிகாரி போல் நடித்து, பணத்தை பறித்துச் சென்ற நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சாந்தி நகரைச் சேர்ந்த மாதேஷ் (59) என்பவரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து, போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகள், 10-க்கும் மேற்பட்ட நெம்பர் பிளேட்டுகள், கட்டுக்கட்டாய் வெள்ளைத்தாள் அடங்கிய போலி ரூபாய் நோட்டுகள், போலி தங்கக்காசுகள், போலீஸாருக்கான உடை போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராஜ்குமார் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.