தமிழக முதல்வர் குறித்து அவதூறு: கடலூர் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கைது

By க.ரமேஷ்

கடலூர்: தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகி ஜெயக்குமாரை நெல்லை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார்(33). இவர் கீரப்பாளையம் ஒன்றிய பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக உள்ளார்.அண்மையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த திருநெல்வேலி திமுகவினர், இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரினை வழக்காகப் பதிவு செய்த திருநெல்வேலி போலீஸார் நேற்று (ஜூலை.17) இரவு கடலூர் மாவட்ட போலீஸிரிடம், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தில் இருக்கும் பாஜக ஐடி விங் நிர்வாகி ஜெய்குமாரை கைது செய்ய வந்து கொண்டிருப்தாக தகவல் தெரிவித்தனர். இதனையொடுத்து சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளர் பரணிதரன் தலைமையிலான சிறப்புப் படை உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸார் ஜெய்குமார் வீட்டுக்கு இன்று (ஜூலை.18) அதிகாலையில் சென்று அவரை அழைத்துச் சென்றனர். பின்னர் சிதம்பரத்தில் முகாமிட்டிருந்த திருநெல்வேலி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

பிடிபட்ட ஜெய்குமாரை கைது செய்த திருநெல்வேலி போலீஸார் தற்பொழுது அவரை திருநெல்வேலிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று உள்ளனர். அடுத்தடுத்து பாஜகவினர் தொடர்ந்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE