சென்னை | தலைமறைவாக இருந்த 11 ரவுடிகள் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாக இருந்த 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். மாநகரம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் ரவுடிகளுக்கு எதிராக ஒருநாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சென்னையில் உள்ள 136 முக்கிய சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் போலீஸார் தீவிரமாக கண்காணித்து, அங்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 78 திருநங்கைகளை எச்சரித்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனஅறிவுறுத்தியும் அனுப்பி வைத்தனர்.

ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE