சென்னை | போதைப் பொருள் விற்றதாக பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்துவோர், விற்பனை செய்வோரைக் கண்டறிந்து, போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

இதையொட்டி, ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ஓட்டேரி செல்லப்பா தெருவில் சோதனைமேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்த டோபிகானா வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பவித்ரன் (26) என்பவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரது கூட்டாளியான பெரம்பூர் மங்களபுரம் பரமேஸ்வரி (27) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதேபோல, மடிப்பாக்கம் போலீஸார், கீழ்கட்டளை ஏரி அருகில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த பொழிச்சலூர் சாம்ராஜ் (28) என்பவரைக் கைது செய்தனர். மேலும், புழல் பகுதியில் மத்திய சிறை நுழைவுவாயில் அருகே கஞ்சா மற்றும் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்த வியாசர்பாடி உதயசூரியன் நகர் அபினேஷ் என்ற அபியை (24) கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். மதுரவாயல் ஏரிக்கரை சிக்னல் அருகே கஞ்சா வைத்திருந்த நெற்குன்றம் பிரகாஷ் (36) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE