கூடுவாஞ்சேரியில் கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை

By செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62). இவரது மனைவி மஞ்சுளா (53). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்தோவியன் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இத்தம்பதி, மகனின் திருமண செலவுக்காக வங்கி கடன், மகளிர் சுய உதவிகுழு கடன் உள்ளிட்டவற்றில் அதிகப்படியான கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு வழக்கம்போல் வீட்டுக்கு வந்த கருத்தோவியன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மஞ்சுளா அதிகப்படியான நீரிழிவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர்களது அறை நீண்டநேரமாக திறக்காததால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுவாஞ்சேரி போலீஸார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது இருவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சினை காரணமாக கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE