ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

By கி.பார்த்திபன்

நாமக்கல்: ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் அவரது கணவர் மற்றும் இரண்டாவது மகள் ஆகிய மூவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பூவாயம்மாள் திருமண மண்டபம் அருகே வசிப்பவர் அருண் லால். இவர் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார்.

இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இன்று (ஜூலை 12) காலை நீண்ட நேரமாக அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது அருண் லால் அவரது மனைவி தேவிப்பிரியா, இரண்டாவது மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூவரது பிரேதங்களையும் கைப்பற்றினர். அக்கம்பக்கத்தினரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். எனினும் அவர்களது இறப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட அருண்லால், தேவிப்பிரியா ஆகியோரின் மூத்த மகள் பெங்களூரில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE