மதுரையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து 2 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை திடீர் நகர் பகுதியிலுள்ள நன்மை தருவார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் தர்ஷன் (19). இவரது பிறந்த நாளை நண்பர்களுடன் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டார். இதையொட்டி கடந்த 2 நாளுக்கு முன்பு , அவரது வீட்டுக்கு அருகிலுள்ள போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக நண்பர்கள், உறவினர்களை அழைத்து இருந்தார்.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஆர்டர் செய்து பிரமாண்ட கேக்கை வரவழைத்தார். பாடலுடன் பெரிய பட்டாக் கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி உற்சாகமடைந்துள்ளார். நண்பர்களுக்கும் கேக் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.இந்நிகழ்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்து, நண்பர்களின் வாட்ஸ் அப் குழுக்களிலும் அனுப்பி லைக் பெற்றுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த திடீர்நகர் காவல் ஆய்வாளர் காசி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.பட்டாக் கத்தியுடன் தர்ஷனை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது ஆயுதம் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பட்டாக் கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருசில ரவுடிகள் தங்களது பிறந்த நாளை அரிவாள், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது போன்று, மதுரையிலும் இந்த கலாசாரம் தலை தூக்குவது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE