மதுரை: மதுரையில் பூட்டிக் கிடந்த வீட்டில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டா என்ற கோணத்தில் போலீஸார் விசாரக்கின்றனர்.
மதுரை கரிமேடு ஆர்வி நகரைச் சேர்ந்தவர் கனக சுப்பிரமணியன். இவரது வீட்டை வாடகைக்கு எடுத்து விசுவாசபுரியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனது மனைவியுடன் வசிக்கிறார். ரசாயனப் பொறியாளரான இவர், மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணிபுரிகிறார். அஜித்குமார், அவரது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று இரவில் அவரது வீட்டுக்குள் இருந்து திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.
இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் கரிமேடு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்த நிலையில் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தடய அறிவியல் நிபுணரும் சம்பவ இடத்துக்கு வந்து, சில தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளார்.
» கொடைக்கானலில் தக்காளி ரூ.150-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி
» மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது: முத்தரசன் பேட்டி
அஜித்குமார் வெளியூர் சென்றிருப்பதால் அவரது செல்போன் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் எடுக்கவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், அவரை தொடர்புகொள்ள போலீஸார் தொடர்ந்து முயற்சிகின்றனர். ரசாயனப் பொறியாளர் என்பதால் அவர் வைத்திருந்த ரசாயனம் மற்றும் மருந்து பொருட்களில் உராய்வு ஏற்பட்டு வெடித்து இருக்குமா அல்லது நாட்டு வெடிகுண்டா? என, பல்வேறு கோணத்திலும் கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.