திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார் எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில், காரில் வந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பேருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததில் நடத்துநர் உட்பட 43 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கே.உடையாப்பட்டியை சேர்ந்த டீ கடை உரிமையாளரான மணிகண்டன்(25), அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருடன், பழனி அருகே கணக்கம்பட்டி சித்தர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
மணப்பாறையை அடுத்த கல்கொத்தனூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, காரின் டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மையத் தடுப்பைத் தாண்டி எதிர் திசையில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில், பேருந்தின் முகப்பு பகுதியில் சிக்கிக் கொண்ட கார் 50 மீட்டர் தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சாலையோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் பேருந்துடன் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணித்த மணிகண்டன், தீனதயாளன்(20), அய்யப்பன்(20), முத்தமிழ்செல்வன்(48), ஆளிப்பட்டி நாகரத்தினம்(36) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
» ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் விரைந்து வந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், விபத்தில் காயமடைந்த பேருந்து நடத்துநர் சுப்பிரமணியன், பயணிகள் என 43 பேரை மீட்டு, மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 19 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். 24 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. எஸ்.பி. சுஜித்குமார், டிஎஸ்பி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.