குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பொது ஒழுங்கு முற்றிலும் மீறப்பட்டுள்ளதா என்பதைக் கவனத்தில் கொண்டே குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தமிழக காவல்துறை டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகளின் பரிந்துரையை பரிசீலித்து குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலுக்கு உட்படுத்த ஆணை பிறப்பிக்கின்றனர்.சமீப காலமாக, மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் குண்டர் சட்ட தடுப்பு காவல் ஆணைகள், சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதுடன், தடுப்பு காவல் ஆணை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் குற்றவாளிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கிறது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இச்சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்யும்முன் கையாள வேண்டிய உத்திகளை விரிவாக குறிப்பிட்டு, தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடித விவரம்: “பொது ஒழுங்கு” மற்றும் “சட்டம் மற்றும் ஒழுங்கு” குறித்த வேறுபாடுகளை விரிவாக எடுத்துரைத்து “பொது ஒழுங்கு” முற்றிலும் பாதிக்கப்படும் கடுமையான வழக்குகளில் மட்டும் இச்சட்டத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இச்சட்டத்தை விதிவிலக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், தவறாக பயன்படுத்தினால் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 மற்றும் 22ன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயலாக அமையும்.

குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்க பரிந்துரைக்கப்படும் குற்றங்கள் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடுமையான குற்றங்களாக இருக்க வேண்டும். மேலும் குற்றச்செயல்கள் பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவதாக இருக்க வேண்டும். இக்குற்றச் செயலால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரோ ஒட்டு மொத்த சமூகமோ பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் இருக்க வேண்டும்.

சாதாரண சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கையாள இந்திய தண்டனை சட்டத்தில் போதுமான வழிமுறைகள் உள்ளன. இதை, காவல் துறையினர் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் உட்படுத்த பரிந்துரைக்கும் முன் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய விரிவான வழிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்றை காவல்துறையினருக்கு டிஜிபி அனுப்பிவைக்க வேண்டும்.

இதன்மூலம், மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் தடுப்பு காவல் ஆணைகள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படாமல் உறுதி செய்வதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE