தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம், மணஞ்சேரியில் அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 435 வெளிமாநில மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.
மணஞ்சேரி பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக புதுச்சேரி மாநில மதுபானங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருவிடைமருதூர் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மணஞ்சேரி, நீரொழுங்கி அருகிலுள்ள பகுதியில் போலீஸார் சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 180 மிலி அளவு கொண்ட 402 மதுபாட்டில்களும், 33 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அய்யர் சக்திவேல் (33) மற்றும் செல்வராஜ் மகன் ராஜ்மோகன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிந்து, திருவிடைமருதூர் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், அவர் பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சமாகும். அய்யர் சக்திவேல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது