ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகைபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ஸ்ரீரங்கம்(35). இவரது கணவர் கார்த்தி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(19) என்ற மகனும், மஞ்சுளாதேவி(17) என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முத்துஸ்ரீரங்கம், கார்த்தி ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனது குழந்தைகளுடன் முத்து ஸ்ரீரங்கம் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் முத்து ஸ்ரீரங்கத்திற்கு அவரது தங்கை கணவர் ஈஸ்வர அய்யனார்(35) என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இரவு மதுபோதையில் வந்த ஈஸ்வர அய்யனார், முத்துஸ்ரீரங்கத்தை அரிவாளால் வெட்டினார். அப்போது தடுக்க வந்த மஞ்சுளாதேவிக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவர்களை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளாதேவி உயிரிழந்தார்.

இதுகுறித்து மல்லி போலீஸார் ஈஸ்வர அய்யனார் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர அய்யனார், கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி, முத்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு வழக்கில் சாட்சியளித்தால் உன்னையும், மகனையும் வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து புகாரில் மல்லி போலீஸார், ஈஸ்வர அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இரு வழக்குளில் ஈஸ்வர அய்யனாருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE