தாயை கொன்று உடலை காவல் நிலையம் கொண்டுசென்ற மகள்

By இரா.வினோத்


பெங்களூரு: மேற்கு வங்கத்தை சேர்ந்த சேனாலி சென் (39) தனது தாய் மற்றும் மாமியாருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வரும் சேனாலி சென் அடிக்கடி தனது தாயார் பீவா பவுலுடன் சண்டையிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சேனாலி சென் தனது தாயாருக்கு பாலில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரின் கழுத்தை தனது துப்பட்டாவில் இறுக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பிறகு சோனாலி சென் மாலையில் மைக்கோ லே-அவுட் காவல் நிலையத்துக்கு பெரிய சூட்கேஸுடன் சென்றார். அதில் அடைத்து வைத்திருந்த தாயின் சடலத்தை போலீஸாருக்கு திறந்து காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சேனாலி சென் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE