கோவை: கோவை பீளமேடு கள்ளிமேடு வீதியைச் சேர்ந்தவர் பொன்மணி (57). பேன்சி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த நபர், பொன்மணி அணிந்திருந்த பத்தரை பவுன் நகையை பறித்துவிட்டு தப்ப முயன்றார். அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரைப் பிடித்து பீளமேடு போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பீளமேடு கிரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த அர்ஜூன் (38) என்பதும், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் தனது மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.