கோவை: கோவை பீளமேட்டில் இயங்கிவந்த யுடிஎஸ் என்ற நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.
டிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மொத்த மோசடி தொகை ரூ.1300 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 31 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 76 ஆயிரம் பேரின் விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் சூலூரைச் சேர்ந்த ரமேஷ்(30) கடந்த 6-ம் தேதி கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சரணடைந்த ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கையை போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.