ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி அருகே இரு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி சிலோன் காலனியை சேர்ந்தவர் செல்வம் (68). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி 6 மற்றும் 8 வயதுடைய சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த புகாரியில் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செல்வத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.