சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகோட்டை மகளிர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதில் நாச்சியப்பன் மீது வழக்கு பதியாமல் இருக்க, சிலர் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.50 லட்சம் வரை வாங்கினர். மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இதனிடையே அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த 2022 ஜன.25-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாச்சியப்பன் மனைவி சகுந்தலாதேவி தனது கணவரிடம் இருந்து பணத்தை பறித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் உத்தரவுபடி, இதுகுறித்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி சுரேஷ் பீட்டர் பெலிக்ஸ் தலைமையிலான போலீஸார் நாச்சியப்பனை மிரட்டி பணம் பெற்றது தொடர்பான வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் உட்பட 2 பேர் கைதாகினர். இந்நிலையில், கல்லல் அருகேயுள்ள கீழப்பூங்குடியைச் சேர்ந்த தேவேந்திரனை (47) சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE