சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 301, பெண்கள் 251 என மொத்தம் 552 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 253 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 58,997 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 18,658 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 177 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 2,313 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 476 ஆகவும், சென்னையில் 221 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 12,213 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.58,215 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,624 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 195.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
» ''எதிர்பார்ப்புகள் வலி கொடுக்கிறது'' - இந்திய அணியில் இடம் பிடிக்காத ராகுல் திவாட்டியா ட்வீட்
இதனிடையே, "பொதுமக்கள் காய்ச்சல், சளிக்கான அறிகுறி அல்லது தொண்டை தொடர்பான பிரச்சினைகள் போன்ற உடலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > “காய்ச்சல், சளி அறிகுறி... அலட்சியம் வேண்டாம்” - தஞ்சை சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை