தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று ஆண்கள் 23, பெண்கள் 16 என மொத்தம் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,390 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,109 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 26 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 256 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 31 ஆகவும், சென்னையில் 16 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், "19-ம் தேதி ஐஐடியில் முதல் கரோனா தொற்று பதிவானது. 20-ம் தேதி 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 300 மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை ஆய்வுக்கு வந்தபோது பலர் மாஸ்க் அணியவில்லை.

அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை. யாருக்காவது அறிகுறி இருந்தால் உடனடியாக சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினசரி சோதனையை 25,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ கரோனா இல்லை. ஐஐடியில் எடுக்கப்பட்ட மாதிரி மரபியல் சோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE