ஊரடங்கு: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்; அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை மக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை கடைப்பிடிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் தமிழக எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவசியமான தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில், அம்மா உணவகங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு வேண்டுகோளுக்கு ஏற்ப நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தமிழகத்தில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE