ஓடிடி திரை அலசல் | Farha - ஓர் இளம் பெண்ணின் சிதைந்த கனவுகளும், எஞ்சிய நம்பிக்கைகளும்!

By இந்து குணசேகர்

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி தங்களது அன்றாட வாழ்வை கடத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தின் ஒரு குக்கிராமத்தில் வளர்கிறாள் ஃபர்ஹா (கரிம் தாஹிர்) திருமணத்தை மட்டும் கனவாக கொண்ட தனது சக தோழிகளுக்கு மத்தியில் கையில் நாவல்களுடனும், புத்தகங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கிறாள் ஃபர்ஹா. அவளுடைய தந்தை அக்கிராமத்தின் மேயராக இருக்கிறார். தன்னைச் சுற்றி பிற்போக்குதனங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் மகளின் கனவுகளுக்கு துணையாகவும், தனது கிராமத்தின் பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவும் வெளிப்படுகிறது அம்மேயர் கதாபாத்திரம்.

15 வயதைக் கடக்கும் பெண்களுக்கு உடனடியாக திருமணத்தை முன்வைக்கும் சமூகத்தில் ஃபர்ஹாவை நோக்கியும் அந்தத் தருணம் திரும்புகிறது. “அவள் எதைப் படிக்க போகிறாள்... குரானைதான் அவள் படித்துவிட்டாளே?” என்ற தனது ஆசிரியரின் கேள்விக்கு, “நான் அரசியல், கணிதம், ஆங்கிலத்தைப் படிக்க போகிறேன்” என்று கோபமாய் கூறும் ஃபர்ஹாவின் வார்த்தை, அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஒட்டுமொத்த பெண்களின் குரலாக நம்முன் ஒலிக்கிறது. எதிர்ப்புகளை மீறி தனது கிராமத்திலிருந்து வெளியேறி நகருக்குச் சென்று தனது படிப்பை தொடர்வதில் ஃபர்ஹா உறுதியாக நிற்கிறாள். தந்தையும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.

நகரத்தில் சென்று மேல்படிப்பை தொடரப்போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த ஃபர்ஹாவுக்கு அந்த மகிழ்ச்சி ஒருநாள் முழுவதும் கூட நீடிக்கவில்லை. அவளது நம்பிக்கை உடைப்படும் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.

மேல்படிப்பு குறித்து கனவு கண்ட ஃபர்ஹாவின் கண்களுக்கு குண்வெடிப்புகளும், துப்பாக்கி குண்டு சத்தங்களும், கொலைக் காட்சிகளும் காத்திருந்தன. ஃபர்ஹாவை இருள் சூழ்கிறது. தன் கண்முன்னே தனது கிராமம் அழிவதைப் பார்த்து உடைகிறாள். “நான் வந்துவிடுவேன்... இங்கயே இரு” என்ற தந்தை, நாட்கள் கடந்தும் திரும்பி வரவில்லை. இறுதியில் எல்லாவற்றையும் இழந்து ஃபர்ஹாவின் கால்கள் எங்கோ நம்பிக்கையுடன் பயணிக்கின்றன. நாமும் அவளுடன் அடுத்த கணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

1948-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனர்களுக்கு நடந்த அவலங்களை உண்மைக் கதையை மையப்படுத்தி இயக்குநர் தரின் ஜெ சலாம், ‘ஃபர்ஹா’ படத்தின் மூலம் பதிவுச் செய்திருக்கிறார். 90 நிமிடம் கொண்ட இப்படத்தில் கதாப்பாத்திரங்களின் தேர்வு, இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் கச்சித்தமாக பொருந்தியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரினால் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறையையும், ஃபர்ஹா போன்ற இளம்பெண்களின் கனவுகள் அழிக்கப்படுவதையும் சர்வதேச சமூகத்தின் முன்னால் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர். அவரது முயற்சிக்கான பலனும் கிடைத்திருக்கிறது. ஏராளமான சர்வதேச விருதுகளை ஃபர்ஹா திரைப்படம் குவித்து வருகிறது. இப்படம் இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE