‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பு தளத்தில் இடி தாக்கியது - நல்வாய்ப்பாக தப்பிய லைட்மேன்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: மனோஜ் பாரதிராஜா இயக்கி வரும் ‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பு தளத்தில் நேற்று இடி தாக்கியது. இதில் லைட்மேன்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் ’மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார். இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியை சுற்றியை பகுதிகளில் நடந்து வருகிறது. கணக்கன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று (மே 30) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மக்காச் சோளக் காட்டின் நடுவே லைட்மேன்களுக்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று அப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று பெய்த மழையில், லைட்மேன்களுக்காக அமைப்பட்டிருந்த தற்காலிக கோபுரம் ஒன்றின் மீது பெரும் சப்தத்துடன் இடி விழுந்துள்ளது. இதில் கோபுரத்தின் மீது நின்று கொண்டிருந்த லைட்மேன்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த தகவலை இயக்குநர் சுசீந்திரன் தான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இது போன்ற நேரத்தில் ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியை சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE