சென்னை: “அந்தக் கூட்டத்தில் நான் காமெடியாக பேசினேன். அது இவ்வளவு பெரிய செய்தியாக மாறிவிட்டது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என தனது முந்தைய பேச்சு குறித்து நடிகர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், “எனக்கு வயது 69 ஆகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் இப்போதும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அப்படி என்னால் இருக்க முடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன். அந்த வித்தையை 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது சொல்வேன்”என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘போர் தொழில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “ஒரு மீட்டிங்கில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
ஒரு கட்சித் தொண்டர்களிடம், அவரது கட்சித் தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் உள்ளது. இதை மறுக்க முடியாது. எதற்கு பொய் சொல்ல வேண்டும். நான் அதற்கு முயற்சிப்பேன். யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்” என்றார்.
» சைக்கோ கொலையாளியும், க்ரைம் கதையும்... - அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ ட்ரெய்லர் எப்படி?
மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாட்டுக்கு விருதுகளை வாங்கி கொடுத்த மல்யுத்த வீரர்களை அப்படி வலுக்கட்டாயமாக கைது செய்தது தவறு. நாடாளுமன்ற விழாவை இது பாதித்துவிடக்கூடாது என்பதால் அப்படி செய்திருக்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பின்போது நடந்த பூஜை வழக்கமான ஒன்று தான். அதில் எனக்கு எதுவும் தவறாக தோணவில்லை.