“செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி” - புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு குறித்து இளையராஜா

By செய்திப்பிரிவு

“குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த குறுகிய காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதில் பங்காற்றியவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் உத்வேகமான தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் தருணத்தில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான உறைவிடமாக இந்தக் கட்டிடம் மாற நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

ராஜ்யங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக, பிரதமர் மோடி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார். அவருடைய கடமைக்கு உட்பட்ட செயல்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அவரது அனைத்து முயற்சிகளிலும் கடவுள் அவருடன் இருக்கட்டும். இந்த முக்கியமான தருணத்தில் அவரையும், இந்திய அரசையும் நான் மனதார வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE