விஜய்யின் ‘லியோ’வுக்கு பின் ‘தூங்காநகரம்’ இயக்குநர் படத்தில் த்ரிஷா!

By செய்திப்பிரிவு

விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து வரும் த்ரிஷா அடுத்ததாக ‘தூங்காநகரம்’ படத்தின் இயக்குநர் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இந்தப் படம் த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் 67-வது படம் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு நடிகை த்ரிஷா ‘தூங்காநகரம்’, ‘இப்படை வெல்லும்’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷாவின் 68-வது படமாக உருவாகும் இப்படத்தில் த்ரிஷா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர்கள் என மல்டிஸ்டார் காம்பினேஷின் படம் இருக்கும் என கூறப்படுகிறது. படத்துக்கு ‘கொலை வழக்கு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE