‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்!

By செய்திப்பிரிவு

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். இந்தப் படத்துக்கு ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘என்டிஆர்31’ என அழைக்கப்படும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீலை பொறுத்தவரை அவர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஜூனியர் என்டிஆருடன் இணைகிறார். இதன்பிறகு யஷ் நடிக்கும் ‘கேஜிஎஃப் 3’ படத்துடன் இணைவார் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE