கடந்த 2012-ல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் பெரிய அளவில் வசனங்களில்லாத பத்தோடு பதினோன்றாக இருக்கும் ‘அமுதா’ கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷுடையது. பலருக்கு அவர் அந்தப் படத்தில் நடித்திருந்ததே பல வருடங்கள் கழித்துதான் தெரிந்தது. கிட்டதட்ட 11 வருடங்கள் கழித்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஃபர்ஹானா’ படத்தில் முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே நகரும் வகையிலான திரைக்கதை. இந்த 11 ஆண்டுகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்திய திறமையும் உழைப்பும் கவனிக்கத்தக்கது.
‘அட்டக்கத்தி’ படத்துக்குப் பிறகு ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற நாயகி அந்தஸ்து கதாபாத்திரங்களில் நடித்தவர், திடீரென 2015-ம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து மிரட்டினார். இந்தப் படம்தான் நடிப்புக்காக தன்னை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. இப்படியான நடிகர்களை மலையாளத்தில் எளிதாக பார்க்க முடியும். ஆனால், தமிழில் நாயகி எனும் தரத்தில் இருக்கும் ஒருவர் உடனே தாயாக நடிக்க ஒப்புக்கொள்வது கோடையில் பெய்யும் மழை போல அரிதாக நிகழ்பவை. இந்த புள்ளியிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் தற்போதை ‘உமன் சென்ட்ரிக்’ படங்களை அணுக முடியும்.
‘காக்கா முட்டை’ படத்திலிருந்து கட் செய்தால் ‘கனா’. எளிய குடும்ப பின்னணியைக்கொண்ட ஒரு பெண் கிரிக்கெட் விளையாட்டில் சாதிப்பதை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் தனி முத்திரைப் பதித்தார். அடுத்த அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையாவிட்டாலும், ‘ஃபர்ஹானா’ படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே சொன்னது போல, ‘க/பெ.ரணசிங்கம்’ படத்துக்கு அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கும் உண்டு. அந்த ஆதங்கத்திலும், 2022-ல் ஒரே ஒரு படம் மட்டும் வெளியானதாலும், அடுத்தடுத்து ‘உமன் சென்ட்ரிக்’ படங்களில் நடித்து தள்ளினார். வாரத்துக்கு ஒரு படம் என்ற ரீதியில் ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் படையெடுத்தாலும் அதில் அரியணை ஏறியது சொற்பமே.
» நவாசுதீன் போன்ற திறமையான நடிகர் மணிகண்டன்: இயக்குநர் பாலாஜி சக்திவேல் புகழாரம்
» மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ‘புன்னகை தேசம்’ தருண்
2022-ன் இறுதியில் வெளியானது ‘டிரைவர் ஜமுனா’. வாடகை டாக்ஸி ஓட்டும் சுயசார்பு கொண்ட பெண்ணாக டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெண் டிரைவர்களை மையப்படுத்திய படங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படாத நிலையில் அவரின் இந்த தேர்வு புதுமை சேர்த்தது. ஆனால் கதைக்களம் கதாபாத்திரம் அளவுக்கு சுவாரஸ்யம் தர தவறியதன் மூலம் கதாபாத்திரத்துடன் கூடிய கதை தேர்வின் கவனத்தை உணர்த்தியிருந்தது.
மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘தி க்ரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தாண்டு தொடக்கத்தில் பிப்ரவரியில் படம் வெளியானது. தமிழுக்கு ஏற்றார்போல மிகச் சொற்ப மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த படம் அசலை அப்படியே பிரதிபலித்திருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம்போல தனது நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார். அதில் மாற்றமில்லை. ஆனால் ஏற்கெனவே அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மலையாளத்தில் காணக்கிடைக்கும் ‘தி க்ரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ஏன் பார்க்க வேண்டும் என்ற காரணத்துக்கான பதில் படத்தில் இல்லாதது உரிய கவனப்படுத்தலை தவிர்த்துவிட்டது.
ஏப்ரல் 14-ல் ‘சொப்பன சுந்தரி’ படம் வெளியானது. லக்ஷ்மி ப்ரியா, தீபா சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் மூன்று பெண் கதாபாத்திரங்கள் நடித்த இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நின்று படத்தை தாங்கியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், ட்விஸ்ட் என்ற பெயரில் வளைந்து நெளிந்த திரைக்கதை தடுமாற்றம் பலம் சேர்க்கவில்லை.
கால்டாக்ஸி டிரைவர், பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர், சுயசார்பு கொண்டவர், அடிமை விலங்கை உடைத்து வெளியேறும் பெண் உள்ளிட்ட அழுத்தமான கதாபாத்திரங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்து நடிப்பது பாராட்டுக்குரியது. ஆனால், அதேநேரத்தில் அவரது கதாபாத்திரம் கொடுக்கும் தாக்கத்தை மொத்தப் படமும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்காததன் விளைவு அவை உரிய கவனம் பெறாமல் கடந்துவிடுகின்றன.
மேற்கண்ட படங்கள் அதற்கு உதாரணம். ஆனால், இந்த முறை கதையிலும் தனக்கான கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை உறுதியாக சொல்ல முடியும். காரணம் ‘ஃபர்ஹானா’. சில பல குறைகளைத் தாண்டி படத்தில் ஃபர்ஹானா என்ற கதாபாத்திர நடிப்பும், அந்தச் சூழலும், அது ஏற்படுத்தும் தாக்கமும் ஐஸ்வர்யா ராஜேஷ் கரியரில் இப்படத்தை முக்கியமான படமாக்கியிருக்கிறது.
‘டிரைவர் ஜமுனா’, ‘தி க்ரேட் இந்தியன் கிச்சன்’, ‘சொப்பன சுந்தரி’ படங்களைத்தாண்டி ‘ஃபர்ஹானா’ கவனம் பெற்றதற்கு அதன் உள்ளடக்கம் மிக முக்கியமான காரணம். ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கதாபாத்திரத் தேர்வில் செலுத்தும் கவனத்தை கதையிலும் கூட்டினால் க/பெ.ரணசிங்கத்தில் தவறிய அங்கீகாரம் அவரின் கரியர் முழுக்க கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.