சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘சந்திரமுகி 2’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் 90 சதவீத முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியுள்ளன. இறுதிகட்டப் படப்பிடிப்பை 10 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு ஜூன் மாதம் முதல் போஸ்ட் புரொடக்சன் பணிகளை தொடங்க இருக்கிறது.
» 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் செல்லும் ஜோதிகா
» ‘இஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘டபுள் இஸ்மார்ட்’ - அடுத்த ஆண்டு வெளியாகிறது
இந்த நிலையில் இப்படத்தை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.