உலக அளவில் இதுவரை ரூ.300 கோடியை வசூலித்த ‘பொன்னியின் செல்வன் 2’

By செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் வெள்ளித்திரையில் வெளியானது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இன்றுடன் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உலக அளவில் படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் படம் ரூ.150 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE