‘வணங்கான்’ படத்தில் இருந்து விலகியது ஏன்? - மவுனம் கலைத்த கீர்த்தி ஷெட்டி

By செய்திப்பிரிவு

பாலா இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகியது குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி மவுனம் கலைத்துள்ளார்.

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்’ படத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று கூறியிருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். அவரும் விலகவே தற்போது அவருக்கு பதில் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து இதுவரை கீர்த்தி ஷெட்டி வாய் திறக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ‘கஸ்டடி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி ஷெட்டி இது குறித்து பதிலளித்துள்ளார்.

’வணங்கான்’ படத்தின் தயாரிப்புப் பணிகள் நீண்டுகொண்டே சென்றதால் படத்தில் இருந்து விலக முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலும் பாலா - சூர்யா இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE