இந்திய அளவில் ரூ.150 கோடி வசூலை நோக்கி முன்னேறும் ‘பொன்னியின் செல்வன் 2’

By செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இந்திய அளவில் ரூ.150 கோடி வசூலை விரைவில் நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் படம் ரூ.250 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் வெள்ளித்திரையில் வெளியானது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்றுடன் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியாகி 8 நாட்கள் கடந்துவிட்டது. 8 நாட்களில் இந்தியாவில் மட்டும் படம் ரூ.130 கோடி அளவில் வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் விரைவில் ரூ.150 கோடியை படம் நெருங்கும் என திரை வர்த்தகர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு குறைந்துள்ளதாகவும் சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE