“நாவலை படமாக்கும்போது சிலருக்கு அதிருப்தி இருக்கத்தான் செய்யும். அதனை தவிர்க்க முடியாது” என ‘பொன்னியின் செல்வன் 2’ குறித்து நடிகரும் இயக்குருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் சின்ன படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் ஒருபுறம் என்னைப் போன்றோரின் படங்கள். இதில் சிறிய படங்களுக்கு முன்னுரிமை வேண்டும். ரெட் ஜெயன்ட் நிறுவனம் சரியான வியாபாரத்தை செய்கிறது. ‘பொன்னியின் செல்வன் 2’ என்பது மணிரத்னத்தின் புனைவு.
ஒரு நாவலை படமாக்கும்போது பல குறைகள் இருக்கத்தான் செய்யும். இப்படியான ஒரு படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதே பாராட்டுக்குரியது. நானும் படம் பார்த்தேன். டக் டக் என காட்சிகள் கட் ஆவது உண்மைதான். படைப்பாளியாக அதிலிருக்கும் சிரமங்களை நான் உணர்கிறேன். அதை அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார். அதில் சிலருக்கு அதிருப்தி இருக்கும் என்பது உண்மை தான்” என்றார்.